Column Left

Vettri

Breaking News

காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு!!




பாறுக் ஷிஹான்

 
அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர்  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5  ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம்  காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம்  வெள்ளிக்கிழமை (10) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
   
கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன.

இதே வேளை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் தனியார் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.அதனை பொறுப்பேற்பதற்காக இது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிகழ்வில்  காரைதீவு  பிரதேச செயலாளர் ஜி.அருணனிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த 35 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் காரைதீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கான காணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள்   பங்குபற்றியிருந்தனர்.

1990 ஆம் அண்டு காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில்  இராணுவ முகாம் நிலைகொண்டிருந்தமையை தொடர்ந்து அதில் இருந்த  பிரதேச சபையும் பொது நூலகமும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் தங்களது கல்வியை பின் தொடர்வதற்கு போதிய இட வசதி  இன்றி பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

வட-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த   கட்டத்தில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ் முகாமை அகற்றி பிரதேச சபை  பொது நூலக  கட்டிடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில்    முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதுடன்  இம் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது காரைதீவில் நிலை கொண்டிருந்த     இராணுவத்தினர் கல்முனை முகாம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

No comments