கஞ்சாவுடன் இருவர் கைது-சம்மாந்துறையில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வருகை தந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 37 வயது 52 வயதுடைய சந்தேக நபர்களாவர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 14 கிராம் 800 மில்லி கிராம் 57 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் நெறிப்படுத்தலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments