இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை!!
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாட் மற்றும் உணவு மருந்து பரிசோதகர் ஜீவ ராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாட் முஸ்தபா, மேற்பார்வை சிரேஸ்ட பொதுச் சகாதார பரிசொதகர் பைலான் நளீம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் வியாழக்கிழமை(24) மாலை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் விசேட பொதுச் சுகாதார பரிசோதகர் சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் நான்கு குழுக்களாக இணைந்து நடத்திய இச்சோதனையில் 39 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட , சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தூய்மையற்ற பாத்திரங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஷீரும் கலந்து கொண்டார்.
No comments