கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்
நூருல் ஹுதா உமர்
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெற்றது.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.
No comments