Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 15க்கு பின்பு! கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி !!




(வி.ரி.சகாதேவராஜா)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜுன் மாதம் 15 ஆம் தேதிக்கு  பின்பு நடைபெறும்.

இவ்வாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏஎல்எம்.அஸ்மி தெரிவித்தார் .

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு மற்றும் தெரிவுக் கூட்டங்கள் தொடர்பாக கேட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 44 சபைகளுக்கு அண்மையில் தேர்தல் இடம்பெற்றது.

தெரிவான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின்படி ஜுன் மாதம் 02 ஆம் திகதி கிடைக்கிறது.

கிழக்கு மாகாணத்தில்  50% உறுப்பினர்கள் அல்லது 50 % க்கு  கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டு இருக்கின்ற 14 சபைகளின் மேயர் அல்லது தவிசாளர் சுயாதீனமாக  கூட்டங்களை ஆரம்பிக்கலாம் . அந்தந்த சபைகளின் செயலாளர் மற்றும் மேயர் அல்லது தவிசாளர் இணைந்து நான்கு நாட்கள் (04) வேலை நாட்கள் வரக்கூடியவாறு வைத்து உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து முதலாவது அமர்வை நடாத்த வேண்டும். அந்த வகையில் ஜுன் மாதம் 2 ஆம் தேதி முதலாவது அமர்வு நடாத்துவது சாத்தியமல்ல.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் போதுமான அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நிலையில் 30 சபைகள் உள்ளன .
அம்பாறை மாவட்டத்தில் 12 சபைகளும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 09 சபைகளும் இவ்விதம் உள்ளன.

அச் சபைகளுக்கான தவிசாளர் உப தவிசாளர்  தெரிவானது  எனது தலைமையில் அந்தந்த சபைகளில் நடைபெறும் .

இக் கூட்டங்கள் 
பெரும்பாலும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு பிற்பாடு இடம் பெற சாத்தியக்கூறு உள்ளது.
 ஏனெனில் 
30 சபைகளுக்குமான  தெரிவுக்கூட்டத் திகதிகள் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் மும் மொழியிலும் செய்யப்பட வேண்டும்.

மேலும் 7 நாட்களுக்கு முன்பதாக அந்த அழைப்பு விடுக்கப்பட வேண்டும் .

இப்படியான காரணங்களினால் பெரும்பாலும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு பிற்பாடு தான் இந்த 30 சபைகளுக்குமான கூட்டங்கள் நடைபெறும்.
குறைந்தது இக் கூட்டங்கள் நடாத்த 15 நாட்கள் தேவைப்படும்.

No comments