ஆலையடிவேம்பில் அதிபர் ஆசிரியருக்கு வாள்வெட்டு! திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் கண்டனம்
( வி.ரி. சகாதேவராஜா)
ஆலையடிவேம்பில் நேற்று முன்தினம் அதிபர் ஆசிரியருக்கு நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி எமது கல்வி வலயத்திற்குட்பட்ட Km/Tk/திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபரும் ஆசிரியரும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டப்பட்ட கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இச்சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
குறிப்பாக இக்கல்வியாளர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடனும், மாணவர்களின் நலனுக்காகவும் செயற்படும் வேளையில் இக்கொடூரமான செயலை கண்டிக்கிறோம். இத்தகைய வன்முறைகள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதோடு, இதுபோன்ற செயல்களுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.
சம்பவம் தொடர்பான செய்தி.
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் (23) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் பொது மக்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரின் கீழ் பாடசாலையில் கல்வி கற்கும் க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் சிலருக்கு (23) விசேட பயிற்சி செயலமர்வொன்று தம்பட்டையில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் அதிபரின் உத்தரவிற்கு அமைய பி. ப வேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ஆசிரியர் நாளைய பயிற்சி செயலமர்விற்கு செல்வதற்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை முன்பாக ஒன்று கூடுமாறு கூறியுள்ளார்.
இவ்வாறு சில மாணவர்களது வீட்டிற்கு சென்று தகவலை வழங்கிவிட்டு இன்னுமொரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகவலை சொல்ல முற்பட்ட நிலையில் அவ்வீட்டில் சலசலப்பு சத்தம் கேட்டு தான் சென்ற மோட்டார் சைக்கிளில் திரும்ப எத்தணித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வீட்டில் இருந்து வெளிவந்த ஒருவர் ஆசிரியரை வாளால் தாக்கி உள்ளதாக அதிபர் கூறினார்.
இதனையடுத்து குறித்த ஆசிரியர் தனக்கு தகவலை வழங்கிய நிலையில் தானும் அவ்விடத்திற்கு சென்றதாகவும் அங்கு ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை குறித்த நபர் உடைப்பதை அவதானித்ததாகவும் அதிபர் கூறினார்.
உடன் தான் ஆசிரியரை காப்பாற்றி கொண்டு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஆசிரியரை ஏற்றுவதற்கு முற்பட்டபோது தனது மோட்டார் சைக்கிளையும் உதைத்த நபர் வாளால் தன்னையும் தாக்கியதாக குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாதுகப்பற்ற நிலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் கற்பித்தல் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
No comments