Column Left

Vettri

Breaking News

கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றை உருவாக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்




 இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில்  உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம்.மலரவன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் பல்வேறு சுகாதாரக் குறிகாட்டிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஒப்பானதாக காணப்படுகிறபோதும் கண் சுகாதாரக் குறிகாட்டிகள் பிராந்திய அண்டை நாடுகளை விட பின்னடைந்து காணப்படுகிறது. 

இலங்கையின் கண் சிகிச்சை சேவைகள் முதனிலை சுகாதார சேவைளுடன் ஒருங்கிணைக்கப்படாமலும் அவற்றின் ஒரு பாகமாக உள்வாங்கப்படாமலும் உள்ள நிலைமையால் கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக வயது வந்தவர்களில் அதிகரித்துள்ளது. 

இதனால் வாழ்க்கைத்தரம், உற்பத்தித்திறன் என்பன பாதிக்கப்படுவதுடன் பார்வை இழந்தவர்களை அதிகளவில் பராமரிக்கவேண்டிய தேவை சமூகத்துக்கும் குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுவது பெரும் சுமையாகும்.

இந்த நிலைமைகளிலிருந்து நாட்டினையும் மக்களினையும் மீட்டெடுக்க சுகாதாரக் கட்டமைப்பில்  உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.



No comments