Vettri

Breaking News

யாழில் அதிகரிக்கும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ; அ.ஜோன் ஜிப்பிரிக்கோ




 யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளது. 

அதே நேரம் குறிப்பாக வலிகாமம் தென் மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய் கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல தென்னைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

வெண் ஈ தாக்கம் பாரிய அழிவை நிரந்தரமாக ஏற்படுத்தியுள்ளது. பல மரங்கள் காய்கள் இல்லாமல், ஓலைகள் நிறம்மாறி காய்ந்தும், பட்டுபோன நிலையிலும், பல மரங்கள் உள்ளன.

இவற்றைவிட அதன் எச்சங்களினால் தென்னை மரங்களின் பச்சயம் இல்லாமல் மறைக்கப்படுவதுடன் மட்டுமல்ல அருகிலுள்ள பல பயன் தரு மரங்களான மாமரங்கள், பலாமரங்கள், வாழைமரங்கள் என சகல மரங்களினதும் , பயிர்களினதும் இலைகளும் கறுமையாக மாற்றமடைந்துள்ளன.

இதனால் எதிர்காலத்தில் பச்சயம் அற்று ஔித்தொகுப்பு நடைபெறாமல் ஏனைய பயிர்களும் மரங்களும் அதிகம் பாதிப்புள்ளாகி அழிவடையப் போகின்றன.

இந்த தாக்கத்தை உரிய விவசாய திணைக்களமோ, மாவட்ட செயலகமோ, பிரதேசசெயலகங்களோ கணக்கில் கொண்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை செய்வதாக தெரியவில்லை.

பல பெண் தலைமைத்து குடும்பங்கள், பொருளாதார கஸ்டமுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதாரங்களாக பயிரிட்டுள்ள தென்னை உட்பட ஏனைய பயன்தரு மரங்கள், பயிர்களும் வெண் ஈ தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளதால்  பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வியாக மாறி வருகிறது.

ஆகவே சண்டிலிப்பாய் பிரதேசெயலக பிரிவில் மட்டுமல்லாது முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த  மத்திய  விவசாய அமைச்சு வடக்குமாகாண ஆளுநர், மாவட்ட செயலர் ஆகியோர் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார். 


No comments