Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து டக்ளஸ் தேவானந்தா காரைதீவுக்கு விஜயம்






 
 பாறுக் ஷிஹான்


ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா  செவ்வாய்க்கிழமை (17)  காரைதீவு கலாச்சார நிலையம் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அவர் அங்கு  உரையாற்றுகையில் 

தேர்தலுக்கு இன்னும் 2,3 நாட்கள் தான் எஞ்சி இருக்கின்றது.இந்த தேர்தலுடன் எமது  கடமைகள் பொறுப்புகள் நிறைவடைய போவதில்லை.1990 ஆண்டு ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பகுதியில்  ஈபிடிபி கட்சியின் அரசியல் அலுவலகம் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தது.துரதிஸ்டவசமாக இவ்வலுவலகம் பின்னர் மூடப்பட்டது.அதுமாத்திரமன்றி அந்த காலப்பகுதியில் இருந்த பிரபாகரனின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரனின் பணிப்புரைக்கமைய ஈபிடிபி உறுப்பினர்களை கொலை செய்ததும் கொல்ல முற்பட்டதும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டமையினாலும் இவ்வலுவலகத்தை மூட வேண்டி ஏற்பட்டது.ஆனால் மிக விரைவில் இம்மாவட்டத்திற்குரிய அலுவலகத்தை தோழர்களின் உதவியுடன் மீண்டும் திறக்க இருக்கின்றோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது.பிரதான வேட்பாளர்களாக மூவர் களத்தில் இருக்கின்றார்கள்.இம்மூவரில் எமது ஈபிடிபி கட்சி விரும்புகின்ற ஜனாதிபதி வேட்பாளராக அம்மான் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார்.ஏனைய வேட்பாளர்கள் சஜீத் மற்றும் அனுர இதர போட்டியாளர்களாக இருக்கின்றனர்.இன்று நாடு இருக்கின்ற நிலைமையில் எமது கட்சியின் ஆய்வின் படி நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்லக் கூடிய ஆற்றல் அறிவு அம்மான் ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் இருக்கின்றது.அவர் கடந்த 2 வருடங்களில் தன்னால் நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என நிரூபித்திருக்கின்றார்.கடந்த காலங்களில் எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்ததை யாவரும் அறிவீர்கள்.அதிலிருந்து மீட்டு நாட்டை முன் கொண்டு செல்லும் பணியை அவர் தான் முன்னெடுக்கின்றார்.







ஏனைய இரு வேட்பாளர்களுக்கும் கடந்த காலங்களில் நாடு இருந்த நிலைமை தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் அவர்கள் அதை தட்டி கழித்து விட்டார்கள்.ஏனெனில் பொறுப்பெடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை.பயம் காரணமாக அவர்கள் தட்டி கழித்து விட்டார்கள்.ஆனால் அம்மான் ரணில் விக்ரமசிங்க தைரியத்துடன் முன்வந்து அதை செய்து காட்டி இருக்கின்றார்.அவரால் இன்னும் செய்ய வேண்டி இருக்கின்றது.அவர் கடந்த காலங்களில் நாட்டை பொறுப்பேற்கும் போது விலையேற்றங்கள் பொருள் தட்டுப்பாடு வரிசை யுகம் என்பன இருந்தன.தெற்கில் கூட சில வன்முறைகள் தலைவிரித்தாடியது.எனினும் கடந்த 2 வருடங்களில் எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வந்து நாட்டை முன்னோக்கி செல்கின்ற வழிகளை ஏற்படுத்தியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதிகளை பெறக்கூடாது என தென்னிலங்கை பகுதியில் உள்ள சில தரப்பினர்கள் கூறிய போதிலும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தர்க்க ரீதியாக பதிலளித்து அக்கடன்களை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்தார்.

ஆனால் நாட்டை புதியவர்கள் பொறுப்பேற்கும் போது நாங்கள் மீண்டும் பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்.ஆனால் இவ்விடயம் சாத்தியமற்றது.எனவே அம்மான் ரணில் விக்ரமசிங்கவின் சேவை தொடர வேண்டும்.அந்த வகையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.எரிவாயு சின்னத்தில் அம்மான் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.எரிவாயு(சிலின்டர்) சின்னம் எல்லோருக்கும் பரீட்சயமான சின்னம்.வீட்டுப்பாவனைக்கான சின்னம்.அந்த வகையில் எதிர்வரும் தேர்தலில் சிலின்டர் சின்னத்திற்கு  எங்கள் வாக்கினை செலுத்தி அவரது வெற்றியில் நாங்கள் பங்கெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் நாங்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி அடைய செய்வதற்கும் முன்னேற்றம் அடைய செய்வதற்கும் சாதகமாக அமையும் என தெரிவித்தார்.

அத்துடன் காரைதீவு மக்களினால் கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவின்  30 வருட அரசியல் பாராளுமன்ற நிறைவை ஒட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us