கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு
(பாறுக் ஷிஹான்)
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்தந்தை ஜெ. லெபோன் சுதன் நேற்று (07) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் (FSC) ஓய்வுபெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஏ. சுமன் பதில் அதிபராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்தநிலையிலேயே புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஸஹுதுல் நஜீம், கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுரேஷ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் எஸ். ஸ்ரீரங்கன், பழைய மாணவர் சங்கப் பொருளாளர் ரி. தர்ஷன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் சர்வமத ஆன்மீகத் தலைவர்கள், திருச்சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றுப் புதிய அதிபருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
No comments