புத்தளம் சிறம்பியடி பகுதியில் சகோதர்களுக்கிடையில் கத்திக்குத்து!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம், சிறம்பியடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த யுவதியை திருமணம் செய்வதற்காகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த யுவதிக்கு, தனது இளைய சகோதரன் போதை மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறி, மூத்த சகோதரனுக்கும் இளைய சகோதரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றி எல்லை மீறிய நிலையில், மூத்த சகோதரன் கத்தியை எடுத்துக்கொண்டு இளைய சகோதரனை வெட்டுவதற்கு பாய்ந்துள்ளார்.
அப்போது அங்கு நடந்த மோதலைத் தடுத்து நிறுத்தி, இருவரையும் சமாதானப்படுத்த மற்றுமொரு சகோதரனான வன்னிஆரச்சிலாகே தரிது சதருவன் (வயது 23) நடுவில் புகுந்துள்ளார். எனினும், ஆத்திரம் அடங்காத மூத்த சகோதரன் கத்தியால் சரமாரியாகத் தாக்கியதில், சண்டையை விலக்கச் சென்ற தரிது சதருவன் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட புத்தளம் பொலிஸார், 25 வயதுடைய மூத்த சகோதரனைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
No comments