மதுரங்குளியில் விபத்து பொலிஸ் சார்ஜன்ட் பலி!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மிக மோசமான விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய நகருக்கு அண்மித்த பகுதியில் இரவு 8.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம், இடம்பெற்றுள்ளது
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (இல: 73287) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்துள்ளது.
திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த லொறியின் வலது பக்கப் பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அம்புளன்ஸ் வண்டியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது, மாரவில பகுதியை அண்மித்த வேளையில் அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுப்பதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறியைக் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
No comments