Column Left

Vettri

Breaking News

பாண்டிருப்பில் களைகட்டிவரும் பாஞ்சாலியின் தீப்பள்ளய சடங்கு!!!




(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய சடங்கு களைகட்டி வருகிறது. கடந்த 8 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் ஆரம்பமானது. அதற்காக பாண்டிருப்பு பிரதான வீதி வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப் பிரதேசம் ஜெகஜோதியாக பிரகாசிக்கிறது. நேற்று(14) திங்கள் கிழமை இரவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு பாரம்பரியமாக இறைவனை எழுந்தருள அழைத்து வரும் புனித நிகழ்வு இடம்பெற்றது . அதனை முன்னிட்டு சைவா மற்றும் ஸ்பான்ட் அமைப்பினர் பக்தர்களுக்கு வசதியாக நீர் தெளிக்கும் திருப்பணியை மேற்கொண்டிருந்தனர். அடியவர்கள் இறைவனைத் தொடர்ந்து பயணிக்கும் பாதையில் தூசி எழாமல், அவர்களின் பயணம் இலகுவாகவும் புனிதமாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கில் இப்பணி அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக அவ் அமைப்பினர் கூறினர். இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்கால் வெட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து 19 ஆம் திகதி சனிக்கிழமை கல்யாணக்கால் வெட்டுதலும் , 23 ம் திகதி புதன்கிழமை வனவாசமும், 24 ம் திகதி வியாழக்கிழமை தவநிலையும் இடம்பெற்று, வெள்ளிக்கிழமை(25) மாலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற இருக்கின்றது . மறு நாள் 26 ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவு பெறும். 03.10.2026 சனிக்கிழமை 8ஆம் சடங்கு நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் வருகை தருவது வழமையாகும்.

No comments

Subscribe Us