Column Left

Vettri

Breaking News

வறட்சியான வானிலை - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது




எல் நினோ (El Niño) வானிலை நிலைமையின் தாக்கம் காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 34 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அசாதாரண சூழ்நிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,995 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அநுராதபுர மாவட்டத்தின் 1 பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், தொடர்ச்சியாக குடிநீரை விநியோகிப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.

No comments

Subscribe Us