கற்பிட்டி அல்மனார் பகுதியில் 500:போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அல்மனார் பகுதியில் சனிக்கிழமை (19) மாலை முன்னெடுக்கப்பட்ட இரகசியச் சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான நபரொருவரை புத்தளம் பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்தனர். 38 வயதுடைய அந் நபரைச் சோதனையிட்ட போது அவரிடமிருந்து சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகள் (Drug Capsules) கைப்பற்றப்பட்டன.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது கற்பிட்டி நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களைப் பிரதான இலக்காகக் கொண்டே இந்த போதை மாத்திரை வியாபாரத்தை தான் தீவிரமாக முன்னெடுத்து வந்ததாகச் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளம் தலைமுறையினரைத் திட்டமிட்டு அடிமையாக்கும் இத்தகைய வலையமைப்பு பாடசாலைகளைச் சுற்றி எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதனை இந்தச் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
புத்தளம் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட 500 போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
No comments