Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு; நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!




அம்பாறை ( பாறுக் ஷிஹான் ) video link- https://fromsmash.com/T~TbJAdmBb-dt அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காரைதீவு, நிந்தவூர் மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்புகளில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்ட போதிலும், அவற்றின் விலைகள் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன. அடிக்கடி ஏற்படும் அசாதாரண காலநிலை காரணமாகத் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சில மீனவர்கள் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்பாறை சந்தைகளில் இன்றைய மீன் விலை விபரம் (ஒரு கிலோகிராம்): சுறா மீன்: ரூபா 3000,சூரை மீன்: ரூபா 2000 - 2500,பாரை மீன்: ரூபா 2400,முரல் மீன்: ரூபா 1000 - 1800,வளையா மீன்: ரூபா 1800,சூடை மீன்: ரூபா 1400,இறால்: ரூபா 1400,திருக்கை மீன்: ரூபா 1300,விளைமீன்: ரூபா 1200,கணவாய்: ரூபா 1200 குறிப்பாகக் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் இத்தகைய தன்னிச்சையான விலை உயர்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இப்பகுதிகளில் மாரிகாலப் பருவமழை இன்மையினால் ஆறு மற்றும் குளங்களில் நன்னீர் மீன்களின் பிடிபாடு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, சந்தைகளில் கருவாடு வகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களின் பிரதான சந்தைகளில் மீன் வரத்து குறைவடைந்துள்ளது. பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதன் காரணமாகச் சில்லறைச் சந்தைகளிலும் மீன்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments