Column Left

Vettri

Breaking News

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறையைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி பணிப்பு!!




 மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறையைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே,  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை  மேற்கொள்ளக் கூடாது.  சகல சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம். உரிய நேரத்தில் வரி  அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மதுவரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  அறவிடப்பட வேண்டிய வரியை வசூல் செய்தல், கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்தல் போன்ற புதிய முறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.   அத்துடன், வரி அறவீடு செய்வதில் தற்போதுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் குறைபாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மதுவரி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.   மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேவேளை, உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும்   ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. செயற்கைக் கள்ளு பாவனையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி  இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

No comments